Monday, March 28, 2011

நிதிஷ், மோடி மற்றும் தமிழ்நாடு!


 









தேர்தல் வந்துவிட்டது... கூடவே உடன் பிறவா சகோதரியான 'இலவசமும்'!
கழகங்கள் போட்டி போட்டு இலவச வாக்குறுதிகளை அள்ளிவிட குஷியாகிப் போனார்கள் மாண்புமிகு (தேர்தல் முடியும் வரை மட்டும்) வாக்காளர்களில் பெரும்பாலானோர். ஏதோ ஒன்று நிச்சயம் என நினைக்கும்போது, அவர்கள் ஆனந்த பரவச நிலையை அடைகிறார்கள்.
'திருமங்கலமும்' உண்டு என்பதை அறிந்து வழிமேல் விழிவைத்து பலர் காத்திருக்க, 'விழி'த்து நிற்கிறது தேர்தல் கமிஷன்.
ஆனால், இந்த இலவசங்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நடுநிலையாளர்களும், நாட்டுப்பற்றுடையவர்களும் சிந்திக்கின்றார்களா என்பது கேள்விக்குரியே.


நூறு நாள் வேலைத் திட்டத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியவில்லை. மாறாக, வேலையாட்களையே ஒழித்தது. வேலையாட்கள் இல்லாமல் வெட்டப்பட வேண்டிய கரும்புகள் காய்ந்து உழைத்தவனை நொந்ஹ்டு போகச் செய்தன.
பொருளாதாரத்தில் உயரிய நிலையில் உள்ள எந்த ஒரு நாடும் தனது வறிய மக்களுக்கு இலவசங்களை அளிப்பது இல்லை.
கடந்த மாத புள்ளிவிவரப்படி, தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடி என்கிறது. இன்னும் இலவசங்கள் தொடர, கழகங்கள் போடுகிற போட்டி எங்கு போய் முடியுமோ?
கடந்த ஆட்சி என்னவோ இலவசங்களால் மக்களை வசப்படுத்த, அதையே சூத்திரமாக நினைக்கிறது மற்றொரு கழகம். எந்த ஒரு கட்சியிடமும் தமிழகத்தை வளப்படுத்த உருப்படியான திட்டங்கள் இல்லை. நிரந்தர வளர்ச்சிக்கு வழியில்லை.
அடுத்த 5 ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் 2 மடங்கு அதிகரிக்கும் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இன்னும் 20 ஆண்டுகளில் தென் இந்தியா வறண்ட பாலைவனம் ஆகும் என்கிறது உலகச் சுற்றுச் சூழல் நிறுவனம்.
சமகால பிரச்னைக்கு தீர்வு இல்லாதபோது, எதிர்காலச் சிக்கல்களை யார் தீர்ப்பார்கள்?
பீகாரைப் போல் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டு, அடிப்படை வசதிகளை அசுர வேகத்தில் நகர்த்திச் செல்லும் நிதிஷ் குமார் போன்றோ அல்லது பொருளாதார வளர்ச்சிக்கான பணிகளை தானே களத்தில் இறங்கி உழைக்கும் மோடியைப் போன்றோ அல்லது சிறந்த தொலைநோக்குடன் மேற்கு வங்கத்தை அழைத்துச் செல்ல முற்படும் மம்தாவைப் போன்றோ தலைவர்கள் இங்கு இல்லாதது பரிதாப நிலை.
தீராத மின்வெட்டு, கோடியில் குடிநீர் பற்றாக்குறை, தொடரும் மீனவர் பிரச்னை, முடிவில்லா காவிரி சிக்கல் என பலவற்றுக்கும் தீர்வு இல்லை.
இவ்வாறு 'இல்லை'கள்... தொல்லைகளாக தொடர, பிரார்த்திப்போம் இப்படி...
"இறைவா, எங்கள் செந்தமிழ் நாட்டுக்கு நல்லதொரு தலைவனைக் கொடு... அதுவரை, இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் தலைவருக்கு நல்ல புத்தியைக் கொடு."

அறந்தை அபுதாகிர்

Friday, March 25, 2011

Vaiko - MDMK


இன்றைய செய்தியும் நேற்றைய வரலாறும்

இன்றைய செய்தியும் நேற்றைய வரலாறும் : செய்தி: தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன், 2006 தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த போது, தேர்தல் கமிஷனிடம் அளித்த சொத்துக் கணக்கைப் போல், 2011ல் அளித்த சொத்துக் கணக்கு இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதில் எவ்வளவு நிஜம் என்பது, எல்லாருக்கும் தெரியும்.
வரலாறு: சபர்மதி ஆசிரமம்; காந்தியடிகளின் குடில். காந்தியடிகளுக்குச் சேவை செய்யும் மனுபென் காந்தி, காந்தியடிகள் குடிப்பதற்கு ஒரு சொம்பு மாம்பழச்சாறு கொண்டு தருகிறார். காந்தி கேட்கிறார், "எத்தனை மாம்பழத்தின் சாறு' என்று. மனுபென், "இரண்டு' என்கிறார்.

"இரண்டு மாம்பழங்கள் அரையணா. அவ்வளவு மாம்பழச்சாறு சாப்பிடுவதற்கான உடல் உழைப்பு எதையும் நான் செய்யவில்லையே. அப்படி இருக்கையில், நான் இதை அருந்துவது தேசத் துரோகம் அல்லவா. ஆசிரமத்தில் இருக்கும் அரிசனச் சிறுவர்களுக்கு கொடுத்துவிடு' என்றார்.

ஆசிரமத்தில் செயற்குழு வருடம் ஒருமுறை கூடி, ஒவ்வொருவருக்கும் மாதச் செலவிற்கென்று அனுமதி யளிக்கும்.

காந்தியடிகளுக்கு அனுமதிக்கப் பட்ட தொகையை விட, ஒரு மாதம், அரையணா அதிகமாகி விடுகிறது. செயலர் தஞ்சை ஜே.சி.குமரப்பாவுக்கு, ஆசிரம விதிகள் படி காந்தியடிகள் கடிதம் எழுதுகிறார்.

"சென்ற மாதம் எனக்கு விருந்தினர்கள் அதிகம் வந்துவிட்டபடியால், அரையணா அதிகம் செலவாகிவிட்டது. அதை நீங்கள் அனுமதிக்க வேண்டும்' என, கோருகிறார்.

செயலர் குமரப்பா, "அடுத்த வருடம் செயற்குழு கூடி முடிவெடுக்கிற வரை எந்த அனுமதியும் தர முடியாது. அதனால், இந்த மாதம் உங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தில் ஆசிரம நிர்வாகம் கழித்துக் கொள்ளும்' என்று பதிலளித்து விட்டார்.

எல்லாராலும் கேலி செய்யப்பட்டு, பாகிஸ்தான் போரில் மிகப் பெரிய வெற்றி பெற்றாரே, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அவர் அகில இந்தியக் காங்கிரஸ் அலுவலகத்தில் பணியாளராக இருந்தபோது, மாதச் சம்பளம், 15 ரூபாய்.

ஒரு நண்பர், சாஸ்திரியிடம் கைமாறாக ஐந்து ரூபாய் கேட்டார். சாஸ்திரி, "என்னிடம் இல்லையே' என்றார்.

சாஸ்திரியின் மனைவி, அவரை உள்ளே கூப்பிட்டு, ஐந்து ரூபாய் கொடுத்தார். "ஏது பணம்' என்றார் சாஸ்திரி. "சம்பளத்தில் சிக்கனமாகச் செலவழித்து மிச்சம் பிடித்தேன்' என்றார் மனைவி. உடனே சாஸ்திரி தன் ஓட்டை சைக்கிளில் ஏறி, காங்கிரஸ் அலுவலகம் சென்று, "அடுத்த மாதத்தில் இருந்து என் சம்பளத்தில் ஐந்து ரூபாய் குறைத்துக் கொள்ளுங்கள்' என்றார்.

விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்நாடு என்று பெயரிட முதல் குரல் கொடுத்தவர், தமிழ் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்கப் போராடியவர், தோழர் ஜீவானந்தம். திருநெல்வேலியில் இருந்து கட்சிக்கு வசூல் செய்த பணத்தோடு, ரயிலில் போனார்.

காலையில் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தன்னைச் சந்திக்க வந்த தோழர்களிடம், இரண்டு டீ கேட்டார். "ஏன் இரண்டு' என்று தோழர்கள் கேட்க, "இரவு சாப்பிடவில்லை; பசிக்கிறது' என்றார் தோழர் ஜீவா. "கையில் தான் பணம் இருக்கிறதே' என்றனர் தோழர்கள். "அது உழைப்பாளிகள், விவசாயிகள் தந்த பணம். அதைக் கட்சி அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்' என்றார் ஜீவா.

அது அன்று.

இன்று, எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் அவரவர் சம்பளத்தை, அவர்களே உயர்த்திக் கொள்ளும் அநியாயம் நடந்து கொண்டிருக்கிறது.

உள்துறை அமைச்சராக இருந்த தியாகச் செம்மல் கக்கன், மதுரை அரசு மருத்துவமனையில் பொதுமக்களோடு, தரையில் ஒரு பாயில் படுத்திருந்தார். மூப்பனாரில் இருந்து, மதுரைக்கு வரும் எந்தத் தலைவரும், அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. கொடுப்பதற் கென்றே பிறந்த எம்.ஜி.ஆர்., இந்தக் கொடுமையைக் கண்டு கண்ணீர் வடித்து, அவருக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தார்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ராமையா, சென்னையிலே மரணம் அடைந்தார். சென்னையில் இருந்து, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வாடகைக் காரில் கொண்டு வர, அவர் குடும்பத்தினரிடம் பணம் இல்லை.

பெண் அமைச்சர், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த லூர்தம்மாள் சைமன், ஓராண்டுக்கு முன், ஓர் அனாதை நிலையத்தில் இறந்து போனார். இவர்கள் எல்லாம், காமராஜரின், உண்மையான காங்கிரசின் அமைச்சர்கள்! இன்று?

நெல்லைக்கண்ணன்.

Tuesday, September 14, 2010

Employment registration

நாளை முதல் ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு

சென்னை, செப். 14: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.in 

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை 

1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம். 

2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம். 

3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். 

4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம் 

6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன. 

நன்றி: தினமணி