Tuesday, July 13, 2010

மகளிர் மருத்துவம் - சூதக வலி

                   பெண்கள் தான் நாட்டின் கண்கள்.  பெண்களின் நலமே குடும்பத்தின் நலம்.  இதனால்தான் பெண்களை தெய்வமாகப் போற்றி வந்தனர் நம் முன்னோர்கள். 

இயற்கையாக பெண்களுக்கு சில உபாதைகள் ஏற்படும்.  இக்காலக்கட்டங்களில் பெண்கள் தங்கள் உடலை பேணி பராமரித்தால் நோய்கள் ஏதும் அணுகாது.  பெண்கள் ஆரோக்கியமாக  இருந்தால்தான் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

பெண்களுக்கு உண்டாகும் இன்னல்களில் சூதக வலியும் ஒன்று.   அதைப் பற்றி இந்த இதழில் தெரிந்துகொள்வோம். 

பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றை இறுக்கிச் சுருக்குவதுபோல் தோன்றும்.  இந்த வேதனையால் மனதை எதிலும் நாட்டம் கொள்ள முடியாமலும், அன்றாட வேலைகளைக் கூட சரியாகச் செய்ய முடியாமலும் அவதிப்படுத்தும்.  இதையே சூதக வலி என்கின்றனர்.

இந்த சூதக வலி திருமணமான இளம் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.  திருமணமாகாத பெண்களையும் பாதிப்பதுண்டு. அதுபோல் பூப்பெய்தும் பருவம் உள்ள பெண்களுக்கு  அடிவயிற்றிலும், முதுகிலும் இந்த வலி அதிகமாக ஏற்படும்.  சில சமயங்களில் வாந்தி, குமட்டல் வயிற்றுப் பொருமல் போன்றவை தொடர்ந்து உண்டாகும்.

இக்காலங்களில் இவர்கள் அதிகம் மன அழுத்தம் கொள்வார்கள்.  எதிலும் நாட்டம் கொள்ள மாட்டார்கள்.  அடிக்கடி சோர்வுற்றுக் காணப்படுவார்கள்.  மற்றவரிடம் பேசும்போது எரிந்து விழுவார்கள்.    சில நேரங்களில் வேதனையில் அழக்கூடச் செய்வார்கள்.  வேலைக்குச் செல்லும் பெண்கள், கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் இதனை ஒரு கொடிய நோயாகவே கருதுகின்றனர்.  இதனால் சில பெண்கள் திருமணம் செய்துகொள்ளக் கூட தயங்குவார்கள்.  திருமணமான சில பெண்கள் கருத்தரிப்பதில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள்.

சூதக வலியானது முதல்நிலை சூதக வலி, இரண்டாம் நிலை சூதக வலி  என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.

முதல் நிலை சூதக வலி

இவ்வகை வலி எந்த ஒரு நோய் நிலைக்கும் உட்பட்டதாக இருக்காது.  பூப்புக் காலங்களில் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களாலும், வேதியல் மாற்றங்களாலும் உண்டாகலாம்.  இது மாதிரியான சூதக வலி பெரும்பாலும் பதினெட்டு முதல் இருபத்தி ஐந்து வயது வரை உள்ள மகளிருக்கே அதிகம் காணப்படும்.

இரண்டாம் நிலை சூதக வலி

இரண்டாம் நிலை சூதக வலியானது ஏதேனும் கூபக (ணீஞுடூதிடிண்) நோயினைத் தொடர்ந்து  ஏற்பட்டதாக இருக்கும்.

கருப்பையில் கழலைக் கட்டிகள், கருப்பையின் சளிச்சவ்வு பாதிப்படைந்த நிலை, சினைப்பை தாபிதம், சினைப்பை உள்கவச தாபிதம், கருப்பை இரண்டாக பிளவுபட்ட நிலை, கருப்பையின் தசை வலுவிழந்த நிலை, கருப்பை தாபிதம், பெரும்பாடு போன்ற நோய் நிலைகளில் சூதக வலி உண்டாகும்.

எனவே, சூதக வலி உண்டான ஆரம்ப காலத்திலேயே மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.  நோய்க்கு தக்க மருத்துவத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் தீவிர நிலைகளில் இருந்து தப்பிவிடலாம்.

இறுகிச் சுருக்கும் வலி

மாதவிடாய் காலங்களில் முதல் மற்றும் இரண்டாம் நாளில் இவ்வகை வலி தோன்றும்.  அடிவயிற்றில் சுருக் சுருக் என்று வலி தோன்றும்.  சில நேரங்களில் வலியானது தொடைகளுக்கும் பரவுவதுண்டு.

கஞ்சித சூதக வலி

இதில் மாதவிடாய் தோன்றும் பத்து நாட்களுக்கு முன்பே சூதக வலி உண்டாகும்.    இவ்வகை வலி கருப்பை நோய் தொற்றுகளாலும், கருப்பை கட்டிகள், கருப்பை உள்கவச  தாபிதம் போன்ற நோய் நிலைகளில் பெரும்பாலும் உண்டாகலாம்.

சளிச்சவ்வு சூதக வலி

இவ்வகையில் அடிவயிற்றில் மிகுந்த வலி தோன்றும்.  தலைவலி, மனச்சோர்வு கூட தொடர்ந்தாற் போல் ஏற்படும்.  முதலில் வலி ஏற்படும் பின்பு பூப்புக் கசிவு உண்டாகும்.  சளிச்சவ்வானது கட்டி கட்டியாக வெளியாகும்.  இந்நிலையில் மகளிர்க்கு உண்டாகும் வலியானது சிறு அளவிலும் தாங்கமுடியாததாக இருக்கும்.

குறிகுணங்கள்

சூதக வலியானது பெண்களில் எழுபது சதவீதம் பதின் பருவத்திலும் (கூஞுஞுண ச்ஞ்ஞு), முப்பது முதல் ஐம்பது சதவீதம் மற்ற வயது பெண்களுக்கும் உண்டாகும்.  இந்த வலியானது அநேகருக்கு தாங்கக்கூடிய அளவில் இருக்கும்.  எனினும் ஐந்து முதல் பதினைந்து சதவீதம் உள்ள பெண்களுக்கே அன்றாட வேலைகளைச்  செய்ய முடியாத நிலை உண்டாகலாம்.

புரோஸ்டோ கிளான்டின் என்னும் சுரப்பானது குருதியில் அதிகம் கலப்பதால்  இவ்வகை சூதக வலி உண்டாகும்.  இந்த வலியைத் தொடர்ந்து குமட்டல், வாந்தி, அடிமுதுகில் வலி, தலைச்சுற்றல், மயக்கம், மனச் சோர்வு அடைதல் போன்றவை உண்டாகும்.

பெரும்பாலும் பூப்பு அடைந்த 6 முதல் 12 மாதங்களுக்கு  தொண்ணூறு சதவீதம் பெண்களுக்கு சூதக வலி உண்டாகும்.  பின்பு நாட்பட்ட நிலையில் தானே குணமாவதும் உண்டு.


மருத்துவம்

சூதக வலியின் ஆரம்ப கட்டத்தில் கீழ்க்கண்ட மருந்துகளைப் பயன்படுத்தலாம்.  உளுந்து களி செய்து அடிக்கடி உண்டு வந்தால் இடுப்பு எலும்புகள் நன்கு வலுப்பெறும்.

கற்றாழை லேகியத்தை 5 கிராம் அளவு மூன்று மாதங்கள் தொடர்ந்து உண்டு வந்தால் கருப்பையின் அழுக்கு வெளியேறி கருப்பை நன்கு வலுவடையும்.

மாதுளை மணப்பாகு உண்டு வரலாம்.  இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

முருங்கைக் கீரை, அத்திப் பிஞ்சு, பேரீச்சம் பழம், திராட்சை, கரிசாலைக் கீரை, பனங்கற்கண்டு, இலந்தை, பொன்னாங்கண்ணிக் கீரை போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

நன்றி: நக்கீரன் 

No comments:

Post a Comment