Wednesday, July 14, 2010

Plant - eating the rats as food

உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிக்கும் வல்லமை கொண்ட தாவரம் ஒன்று தொடர்பான அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப்பீர்கள். ஆனால் உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த செடியின் இலைகள் உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரபல தாவர இயல் விஞ்ஞானிகள் ஸ்டூவர்ட் மெக்பெர்சன் அலாஸ்டியர் ரொபின்சன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு பிலிப்பைன்ஸ் நாட்டில் விக்டோரியா மலைப்பகுதியில் செடி, கொடிகள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர். இந்த மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மிஷனரிகள் இந்த அபூர்வ தாவரம் பற்றி கேள்விப்பட்டனர். அவர்கள் கொடுத்த தகவலை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தாவரம் பற்றி தெரிந்து கொண்டனர்.
இது குறித்து மெக்பெர்சன் கூறியிருப்பதாவது....
இந்த கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானது. 21ஆம் நூற்றாண்டு வரை இப்படி ஒரு தாவரம் இருப்பதை கண்டுபிடிக்காமல் இருந்ததே மிகவும் அதிசயம் தான். இயற்கை உலகின் அதிசயம் அழகைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ள மிகவும் பாடுபட்டவர் சேர். டேவிட் அட்டன்பரோ. எனவே அவர் பெயரிலேயே இந்த தாவரத்தை அழைக்க முடிவு செய்துள்ளோம். இனி இந்த தாவரம் "நேபன்தஸ் அட்டன்பரோகி" என அழைக்கப்படும். இந்த தாவரம் சிவப்பு பச்சை நிறத்தில் உள்ளது. இதன் தண்டு, நான்கு அடி உயரம் வரை வளரும். விக்டோரிய மலை சரிவுகளில் பெரும் புதர்களுக்கு மத்தியில் மட்டுமே இந்த செடி வளர்கிறது.

இந்த செடியின் இலைகள் தான் அந்த செடிக்கு வாய் போல் உள்ளது. அதன் மேல் அமரும் எலி போன்றவற்றை அப்படியே பிடித்துக் கொள்கிறது. இலையில் சுரக்கும் ஒருவித வழுவழுப்பான எண்ணெய் பசைகளில் இருந்து எலிகள் தப்ப முடியாது. பின்னர் அந்த பசை எலிகளை கொன்று விடுகிறது.
எலிகள் மட்டுமல்ல பூச்சிகள் போன்ற சிறிய உயிரினங்களையும் இந்த தாவரம் கபளீகரம் செய்து விடும். தாவரவியலில் இந்த மாமிசம் உண்ணும் தாவரம் கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. இவ்வாறு மெக்பெர்சன் கூறினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைகழக தாவர இயல் முன்னாள் பேராசிரியர் இவர். 2007 முதல் இந்த தாவரம் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். தன் ஆராய்ச்சியில் மாமிச தாவரம் பற்றிய உண்மைகளை முழுமையாக கண்டுபிடித்த பின்னர் சமீபத்தில் இந்த அதிசயத்தை உலகிற்கு அறிவித்தார்.

No comments:

Post a Comment